ஆஸ்திரிய வெளிவிவகார அமைச்சரைத் தொடர்ந்து பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சர் சோஃபி வில்ம்ஸூக்கும் இன்று சனிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்சம்பேர்க்கில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சோ்ந்த வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரிய வெளிவிவகார அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்று முன்னதாக உறுதிசெய்யப்பட்டது.
இதனையடுத்து இதே கூட்டத்தில் பங்கேற்ற பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சர் சோஃபி வில்ம்ஸூக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளது.
தான் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள விடயத்தை சோஃபி வில்ம்ஸ் தனது ருவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
தனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து வெள்ளிக்கிழமை முதல் தான் சுய தனிமையில் இருந்து வந்ததாக அவா் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 12 –ஆம் திகதி லக்சம்பேர்க்கில் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்களுடன் பெல்ஜியம் வெளிவிவகார அமைச்சர் சோஃபி வில்ம்ஸ் நேரிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனால் இக்கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குறித்த கவலைகள் ஏற்பட்டுள்ளன.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்